பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.

இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,’பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், ‘பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு’ என்றார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »