13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி றைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு ன்னர் பேசப்பட்ட விடயமாகும்.

அன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும் சரி இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு;

கே; தேர்தலில் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்கள் வருவதனை விரும்புகின்றார்களா?

ப; வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருவதனை வரவேற்கின்றேன். கட்டாயம் அவர்கள் வரவேண்டும். எவ்வாறான அழுத்தங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது. இதற்கு முன்னர் பயங்கரவாத அழுத்தம் உள்ளிட்ட விடயங்களிலிருந்து நாட்டை காப்பாற்றவேண்டும் என நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரிடம் கேட்டிருந்தேன்.

கே; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பீர்களா?

ப; ஆக குறைந்தது ஆறுமாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை கட்டாயமாக அதனை நோக்கியே எமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கே; கடந்த காலங்களில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட வேளையில் பல்வேறு அழுத்தங்கள் வந்தன இம்முறையும் அழுத்தங்கள் வந்தன. இறுதிக்கட்ட வேளையில் ஜனாதிபதி யுத்தத்தை நிறுத்துமாறு கோயிருந்தால் நீங்கள் எவ்வாறான முடிவை எட்டியிருப்பீர்கள்?

ப:அழுத்தங்கள் வந்த சந்தர்ப்பங்களை பார்த்தால் அதன் போது வெளிநாடுகளின் அரசியலிலும் எமது நாட்டு அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன நாம் சரியான முறைமையில் செல்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொண்டது.

நாட்டுடன் வைராக்கியத்தை வைத்துக்கொண்டு முன்செல்ல முடியாது. வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் எமக்கு திரும்ப முடியாத ஓர் இடமிருந்தது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு முன்சென்றோம். சரியாக செல்கின்றோம் என்பது தான் முக்கியமானதாகும், அந்தப் பயணத்தை தடுக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. அதனால் தான் நல்ல விடயங்களுக்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

கே; முகாம்களில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்று கூறியிருந்தீர்கள். இந்நிலையில் அம்மக்கள் துன்பப்படுவதாக நீங்களே கூறுகின்றீர்களே?

ப; அச்சுறுத்தல் இருக்குமென்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், லொறிகளில் ஆயிரக்கணகக்கானோரை ஏற்றிக்கொண்டு காடுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத இடங்களில் கிராமங்களில் எவ்விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துகொடுக்காத இடங்களில் மக்களை குடியமர்த்த வேண்டிய அவசியமில்லை.

ஒரே நாளில் மக்களை குடியமர்த்தவேண்டும் என்று நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. தேவையான பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு கண்ணிவெடிகளை அகற்றி உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தே மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும். அரசியல் இலாபத்தை தேடிக்கொள்ளாமல் மக்களின் தேவை, பாதுகாப்பை உணர்ந்து செயற்படவேண்டும்.

பயங்கரவாதிகள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக்கூடாது. தொழிலில் இருந்தபோது நான் இதனையே வலியுறுத்தினேன். தற்போதும் வலியுறுத்துகின்றேன். இவ்விடயத்தில் என் இதயத்தில் அழுக்கில்லை.

கே; கடந்த 30 வருடங்களாக யுத்தத்தை நிறைவு செய்யமுடியாமைக்கு இராணுவ ரீதியிலான பிரச்சினையா? அரசியல் பிரச்சினையா காரணமாகவிருந்தது?

ப; எமது பிழையை மற்றொரு தரப்பின் மீது சுமத்துவதற்கு விரும்பவில்லை. எம்மில் பிரச்சினைகள் இருந்தன. பெரும் தவறுகளை இழைத்துள்ளோம்.

உதாரணமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு கிழக்கை இழந்தோம், முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக ஆனையிறவையும் மாங்குளத்தையும் இழந்தோம். இவ்வாறு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன.

எனினும் யுத்தத்தை நிறைவு செய்யவேண்டும் என்பதில் அரச தலைவர்கள் சகலரும் கூடிய கவனம் செலுத்தினர். சில தருணங்களில் தவறான வழிநடத்தலினால் பல பின்னடைவுகளை சந்தித்தோம். அதனை நாம் ஏற்றுக்கொண்டோம். இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான என்னை பொறுத்தமட்டில் இராணுவத்தின் பின்னடைவும் இதற்கு காரணமாகவிருந்தது.

கே; மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

ப; இந்த கேள்விகளுக்கு அனுபவமிக்க அரசியல்வாதியினால் கூட முறையாக பதிலளிக்க முடியாது. இராணுவத்தில் 40 வருடங்கள் சேவையாற்றியவர் என்பதனால் என்னை சுற்றியிருப்பவர்களும் ஆதரவளிப்பவர்களுக்கும் வழங்கும் ஆலோசனைகளின் பிரகாரம் இதற்கான திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தலாம்.

ஆட்சி செய்த இரண்டு கட்சிகளை பொறுத்தமட்டில் ஐக்கிய தேசியக்கட்சியினால் பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதில் நல்ல அனுபவம் கொண்டவர்கள் அங்கிருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவேன். அவை தொடர்பிலேயே தற்போதைக்கு பேசப்பட்டன. அந்த பாதையிலேயே செல்வேன்.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட விடயங்களாகும் அன்றிருந்த நிலைமைகளும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர், பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன்.

கே; கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றனவே?

ப; ஆம் ,ஆனால் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்னும் பொறுப்பை ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது இங்கு வெறுமனே வெறுமைப்படுத்தப்பட்ட பதவியாகும். அந்த பதவிக்காகவும் எனக்காகவும் நாடு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது ஆனால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.

எவ்விதமான அதிகாரம் இன்றி வேலைகளையும் செய்யாமல் பெருந்தொகையான நிதியை செலவிடுவதற்கு விரும்பவில்லை, நிர்வாகம் தேவை, வேலைசெய்யவேண்டும்.

கே;அன்று சிறுபான்மை இனங்களை பற்றி தவறாக கருத்து தெரிவித்திருந்தீர்களே?

ப; நான் கூறியதை ஊடகவியலாளர் பிழையாக விளங்கிக்கொண்டுவிட்டார். இந்த நாட்டை சிங்களவர்கள் ஆட்சிசெய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. நான் வரலாற்று ஆய்வாளர் அல்ல. சிறுபான்மை இனத்தையும் இணைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியிருந்தேன். அத்துடன் அரசியலமைப்பில் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிங்கள பௌத்தனாகிய நான் சகல மதங்கள், மொழிகள் இனங்களின் கலாசாரத்தை மதிக்கின்றேன் என்பதனால் எவலும் வேறுபாடு இருக்காது.

கே; பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

ப; பாதுகாப்பு தொடர்பில் நான் திருப்தி கொள்ளவில்லை. என்மீதே முதலாவது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான் வீதியில் செல்லும் போது தாக்குதல் நடத்தப்பட்டால் நூற்றுக்கணக்கான பொதுமக்களே பலியாகவேண்டிய நிலைமை ஏற்படும். பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.

கே; ஆயுத கொள்வனவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; படைகளுக்காக பல்குழல் பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இதற்கான நிதி விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சும் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே மேற்கொண்டனர். இராணுவத்தளபதியான நான் தொழில்நுட்ப மதிப்பீட்டை மட்டுமே செய்தேன்.

கே; ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற உங்களால் பெருந்தொகையான நிதியை செலவிடவேண்டிவரும். எனினும் அவ்வாறான பெருந்தொகையை புலிகளுக்கு ஆதரவளித்த சர்வதேச நிறுவனமொன்று ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனவே?

ப; தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தாலென்ன பிரபாகரனின் பெற்றோர்களானால் என்ன இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென பெருந்தொகையான நிதி தேவைப்படும். எனது ஓய்வூதிய கொடுப்பனவான 50 ஆயிரம் ரூபாவில் அதனை செய்யமுடியாது. காரியாலயங்கள் அமைத்து கூட்டங்களை நடத்தவேண்டும். இளைஞர் யுவதிகள் எனக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன்.

கே; யாழ்ப்பாணத்திலும் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா?

ப; என்னால் முடிந்த மட்டில் நான் செய்வேன். அதற்காக “புரம்டர்’ பயன்படுத்தமாட்டேன் பாதுகாப்பு போதாது, பாதுகாப்பு இருந்தால் எங்குவேண்டுமானாலும் சென்று பிரசாரங்களை முன்னெடுப்பேன்.

கே; இந்தியாவுடனான உறவு எவ்வாறு இருக்கின்றது?

ப; நான் இரண்டாவது படைநிலை அதிகாரியாக பதவிவகித்த போது இந்தியாவிற்கு நான்கு தடவைகள் சென்றிருக்கின்றேன். நூறு வீதமல்ல ஆயிரம் வீதம் நல்ல உறவு இருக்கின்றது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தின்போது ஆயுதாரிகளை வழங்கியிருந்தன. ஆனால், மானசீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அயல்நாடான இந்தியா உதவி புரிந்தது.

கே; அரசாங்கத்தில் ஊழல் நிறைந்தது என்கின்றீர்கள். அப்படியாயின் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?

ப; நிச்சயமாக அதனை ஒழிப்பதற்காக நான் நடவடிக்கை எடுப்பேன்.

கே; அரசாங்கத்தின் மீது யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால்?

ப; யுத்தத்தை முன்னெடுத்ததில் நானுமொரு பங்காளி என்பதனால் சரியான தகவல்களை கோருவோம் அவ்வாறு நடந்திருக்குமாயின் அதனை மூடி மறைப்பதற்கு இடமளிக்கமாட்டேன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் .

கே. ஜே.வி.பி., ஐ.தே.க. சந்திப்பில் எதனை கதைத்தீர்கள்?

ப; எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

கே; எந்த கட்சியினர் உங்களை முதலில் சந்தித்தனர்?

ப; யார்? முதலில் சந்தித்தனர் என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்குள் கலந்துரையாடியதன் பின்னர் ஜே.வி.பி., ஐ.தே.க., ஐக்கிய தேசிய முன்னணியுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

கே; ஜனாதிபதியிடம் நீங்கள் கோரியதற்கு இணங்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்திருக்கின்றாரே?

ப; ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எனது பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினேன் அப்போது இருவருக்கும் இடையில் சில விடயங்கள் பேசப்பட்டன. அதனை எழுத்துமூலம் தெரியப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் கேட்டிருந்தார். அதன் பிரகாரம் சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கடிதத்தையே இராணுவ ஊடகப்பேச்சாளர் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடுகின்றார்.

அந்த நேரத்தில் வேறு படையினரின் தளபதிகளை கூட என்னை சந்திப்பதற்கு விரும்பவில்லை, எனக்கு கீழிருந்த என்னால் தரயர்த்தப்பட்டவர்களுக்கு கூட பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கே; உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தை எப்போது கையளிப்பீர்கள்?

ப; வாடகைக்கு வீடொன்றை தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவ்வீட்டு உரிமையாளரை பாதாள உலககோஷ்டியினர் மிரட்டுகின்றனர். எனது அரசியல் காரியாலயத்திற்கு அண்மித்தே வீட்டினை எடுக்கவேண்டும் அதற்கு ஏற்றவகையில் வாடகைவீடொன்று கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவேன்.

கே; நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

ப; லசந்த விக்ரமதுங்க மட்டுமல்லாது கொழும்பில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் எனக்கெதிராக எதிர்காலத்தில் விரல் நீட்டப்படும். இராணுவத்தினர் சீருடையில் இருக்கும் போது ஒழுக்கமாகவே வழிநடத்தப்பட்டனர்.

கே; மதுவுக்கு முற்றுப்புள்ளி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா?

ப; மதுபாவனையின் மூலம் ஏற்படும் சௌகரியத்திற்கும் இடமளிக்கவேண்டும், மதுவை அளவாக அருந்தினால் அது சுதந்திரமான கலந்துரையாடலுக்கு வழிசமைக்கும். எனினும் போதைப்பொருள் பாவனையை அழிக்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தடைசெய்வேன் என்று கூறுவேனாயின் எனக்கு வாக்குகள் கிடைக்காது.

கே; சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்ன?

ப; பௌத்த விஹாரையில் நடந்தது போல இனியும் நடக்கக்கூடாது, மக்கள் அச்சம் பயமின்றி வாழவேண்டும் ,இராணுவத்தினருக்கே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு எவ்வாறு நடக்கும். ஊர்சுற்றுபவர்கள் மற்றும் பிஸ்டலுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க விடக்கூடாது.

கே; இராணுவ அதிகாரியான நீங்கள் எவ்வாறு சட்டத்தை அமுல்படுத்தப் போகின்றீர்கள்?

ப; இராணுவச்சட்டம் வேறு மக்கள் மத்தியில் அமுல்படுத்தவேண்டிய சட்டம் வேறு. இராணுவச்சட்டத்தின் கீழிருந்த நான் தற்போது பொதுமக்களின் சட்டத்தின் கீழ் வந்துள்ளேன். பொதுமக்களுக்கான சட்டமே முன்னெடுக்கப்படும்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

ஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகா “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டி

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ள, முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, “அன்னப்பறவை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர், இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா முதல் தடவையாக ஊடக சந்திப்பை இன்று நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் போட்டியிடுவேன். இருப்பினும் தனியாக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் சார்பில் நான் தேர்தலி்ல் போட்டியிடவுள்ளேன். அன்னப் பறவை சின்னத்தின் கீழ் நான் தேர்தலில் நிற்பேன். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் படையினர் அடைந்த வெற்றியை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியில் அரசியல் தலைமைக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், இடம் பெயர்ந்த தமிழர்கள் கையாளப்படும் விதம் எனக்கு பெரும் வருத்தத்தையே தந்துள்ளது. நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது கூறிய உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டேன். அதேபோல மக்களுக்கு கூறப்போகும் உறுதிமொழிகளையும் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். இராணுவத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற அரசு முனைகிறது. இது கண்டனத்துக்குரியது. தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றப் போவதாக தெரிவித்த அவர் நாட்டின் சீரான நடவடிக்கைகளுக்காக, அரசியல் அமைப்பு சபையை அமைப்பதுடன், 17 வது திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு தாம் மரியாதை செலுத்துவதாக தெரிவித்த அவர், இந்திய கலாசாரத்தை இந்திய மக்களை தாம் நேசிப்பதாக கூறினார். மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளுடனான போரில் மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவ பயிற்சிகளுக்காக தாம் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் சென்றுள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்காக ஆயுதங்களை பெறும் நோக்கில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சென்றதாக குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் குற்றச்செயல்களின் பின்னால், பாதாள உலகத்தினரும்,சில குழுக்களும் இருந்திருக்கலாம் எனக்குறிப்பிட்ட அவர், படையினர் மீதோ அல்லது தம் மீது இது தொடர்பில், குற்றம் சுமத்தப்படுமானால், அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். தாம் இராணுவத்திற்கு தலைமை தாங்கியபோதும் இரவு வேளைகளில் சீருடைகளை கழற்றிவிட்டு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடவில்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். தாம் பொதுவாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறி தமக்கான பாதுகாப்பு குறைக்கப்படுமானால், ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவும் சிவில் வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் ஏன் அவர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்ற அளவில், படையினர் பாதுகாப்பு வழங்கவேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். ” எனத் தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் தமது நண்பர்கள் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மங்கள சமரவீர ஆகியோர், முன்னர் இராணுவத்தளபதியாக இருந்த போது சரத் பொன்சேகாவை விமர்சித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டார். அப்போது சன்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்க கொலையில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று கேட்டபோது அதை பொன்சேகா மறுத்தார். என்னிடம் கூலிப்படையினர் யாரும் இல்லை என்றும் கூறினார். அப்படியும் விடாத நிருபர்கள், உங்களது மருமகன் இராணுவத்தின் இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடையவராக இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதையும் பொன்சேகா மறுத்தார். மேலும், இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால்தான் அவை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் பொன்சேகா. பொன்சேகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை அதிபர் தேர்தல் என்ற பொம்மலாட்டம் தொடங்கி விட்டது. போருக்குப் பின்னர் பெரும் கேள்விக்குறியாகி விட்ட வாழ்க்கையுடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தலால் என்ன நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ராஜபக்ச, பொன்சேகா ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற எண்ணத்தில் தமிழர்கள் உள்ளனர். எனவே தமிழர் கட்சிகள் சார்பில் தனியாக ஒரு வேட்பாளர் களம் இறங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

தமிழ் உணர்வாளர் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்

கனடியப் பொலிசார் நேற்றைய தினம் சீமான் அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும் நேற்று இரவு (கனடிய நேரப்படி) அவர் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் எப்போது இந்தியா சென்றடைவார் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

சீமான் அவர்கள் இன்று நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை நாடு கடத்துவதன் மூலம் நடைபெறவுள்ள மாவீரர் தினத்திற்கும் கனடிய அரசு அச்சுறுத்தல் விடுப்பதாகவே அமைந்துள்ளது. இலங்கை இந்திய கூட்டுச் சதியாக இவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் மேற்குலகம், ஒரு விடுதலைப் போரில் இறந்தவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்த முயல்வது மிகவும் வேதனைக்குரியது.

அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி நடைபெறும் மாவீரர் தினத்தில் தமது சொந்தக் கருத்துக்களை முன்வைக்க கனடிய அரசு தடை விதித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியான விடயம், மட்டுமல்லாது இது அவர்களின் தனிப்பட்ட விருப்பில் எடுத்த முடிவாக இருக்காது என்பதிலும் ஐயமில்லை.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

கருணாநிதி பல்டி :ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன

Photobucketபிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

18-11-2009 அன்று “நம் மவுன வலி யாருக்கு தெரியப் போகிறது?” என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?

ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,

’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் – உயிரனையான் – உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா! எங்கு சென்றாய்?”

மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு இரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அன்று தெரிவித்தவர்தான் அவர்.

பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல, கடிதம் அல்ல, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 16-4-2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் வருமாறு:-

* இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது.

* விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது.

* ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் சம்பந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு, பிரபாகரனை அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக்கொண்டு வரவேண்டும்.”

இப்படியொரு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியவர்தான் தற்போது நான் நல்லதையெண்ணி நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். பிரபாகரனை; என்றைக்கும் ஆதரிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்கு துணை போய் நம்மைத் தாக்கி அறிக்கை விடுகிறார்கள்.

அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே;
தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!’’என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Daily News இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

கருணாநிதி யார் ?? உங்கள் வாக்கு …………..!!

Polls இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »