ஜனநாயகத்தின் நான்காவது து£ணுக்கு கமர்ஷியல் பெயிண்ட் அடித்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அது கலர்ஃபுல் கலக்கலாக இருப்பதால் இனி அவரை ‘கோ’.வி.ஆனந்த் என்றே கூட அழைக்கலாம்!
தின அஞ்சல் புகைப்படக்காரர் ஜீவா, தான் எடுக்கும் அதிரடி புகைப்படங்களால் நாட்டில் ஏற்படுத்தும் புரட்சிதான் கதை. அந்த புரட்சியால் நாட்டையே பிடிக்கும் அஜ்மல் நல்லவரா, கெட்டவரா? பத்திரிகையாளர்களுக்கு இந்த சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும் கடமையும் என்ன? என்பதையெல்லாம் இதைவிட நுணுக்கமாகவும், வியாபார ரீதியாகவும் சொல்வதற்கு இன்னொருவர் வர வேண்டும். ஆனால் அவரும் கே.வி.ஆனந்தாகதான் இருப்பார்! தெளிக்கப்படும் ‘இங்க்’ போல தேவையில்லாத பல காட்சிகளை தானாகவே எரேஸ் செய்துவிடுகிறது மைண்ட்!
ஜீவாவின் முதல் காட்சியே அதிரடி அமர்க்களம். ஒரு பத்திரிகையாளனுக்கு எல்லாமே செய்தியாக தெரிய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிற அந்த முதல் காட்சியில் தொடங்கி, நாட்டையே உலுக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை படமாக்கி நெட் வழியே அனுப்பும் கடைசி காட்சி வரை ஜீவாவின் ஐம்புலன்களும் நடித்திருக்கிறது. நாட்டில் திரியும் முரட்டு சிங்கங்களையெல்லாம் கோபப்படுத்தும் இவர் அலுவலகத்திற்குள் சாதாரணமாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது அழகு. பத்திரிகையாளர்களின் இயல்பு வாழ்க்கையை கன ஜோராக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.
பப்ளிஷரால் அவமானப்படுத்தப்படும் சக நிரூபி கார்த்திகாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜீவா, எதிர்கட்சி தலைவரின் பால்ய விவாகத்தை படம் பிடிக்கிற அனுபவம் த்ரில்லிங்கானது. இடையிடையே வந்து ஜீவாவை அவஸ்தைப்படுத்தும் அந்த கழுதை கூட நமது பிராணனை சூடேற்றுகிறது!
தைரியசாலி நிருபராம் கார்த்திகா. கதையில் விடுங்கள். பாடல் காட்சிகளில் மலையுச்சி ஓரத்திலும், தொங்கு பாறை இடுக்கிலும் நின்று, படுத்து காதல் செய்யும் போது இவர் காட்டுகிற தைரியத்தைதான் தனியாக மெச்ச வேண்டும். சற்றே ஆண்மை கலந்த அழகு! அதுவே எலும்பு நொறுங்க பரவசப்படுத்துகிறது ரசிகர்களை.
சரக்கடித்த எலிபோல சைய் முய் என்று கத்திக் கொண்டு பியா பண்ணும் அமர்க்களங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கை பணத்தை செலவு பண்ணி ரசிக்கலாம். அவரது முடிவு கலங்க வைப்பதும் நிஜம். ஆனால் ஒரு பத்திரிகையாளரின் டிரஸ் கோட், பியாவால் அபாயகரமான அளவுக்கு மீறப்பட்டிருப்பதுதான் அநியாயம்!
அஜ்மல்… ஹ்ம்ம்ம். தமிழ்சினிமாவின் கேட்வாக் கதாநாயகன் அஜீத் என்றால், கிட்டதட்ட அதே அளவுக்கு ‘வாக்’குகிறார் இவரும். இந்தியாவின் யங் சிஎம் என்ற திடீர் அந்தஸ்து ரசிகர்களின் மனதில் தைக்க நெடுநேரம் பிடிக்கிறது. அதற்குள் முடிந்துவிடுகிறது எல்லாமே!
இந்த படத்திற்கு ஏன் பிரகாஷ்ராஜ் என்ற கேள்வி ஏனோ வீட்டுக்கு வந்த பின்பும் தொடர்வது துரதிருஷ்டம். மற்றொரு கட்சி தலைவரான கோட்டா சீனிவாசராவ் வழக்கம் போல அமர்க்களம். தமிழ் பத்திரிகைதானடா இது. அப்புறம் எதுக்கு இங்கிலீஷ்? என்கிற அவரது கேள்வி சிரிப்போடு செருகப்பட்ட சதக்!
சீட்டோடு இறுக்கி முடிச்சு போடுகிறது ரிச்சர் எம்.நாதனின் கேமிரா என்றால், கவனத்தை சிதற விடாத ‘லாக்’ ஹாரிசின் இசை! லொகேஷனும் இசையும் நடன இயக்கமும் இணைந்து நடத்தியிருக்கிற மந்திர ஆட்டத்துக்கு மதி மயங்கி போகிறது தியேட்டர் மொத்தமும்!
Rating – 4.5 / 5
Onelanka விமர்சன குழு