ஒரு நிம்மதி இன்னொரு நிம்மதியை கெடுக்க முடியுமா? ரமலத்-பிரபுதேவா-நயன்தாராவின் முக்கோண காதலை அறிந்தவர்களின் பதில், ‘முடியும்’ என்பதாகதான் இருக்கும். ரமலத்தின் நிம்மதியில் அத்துமீறி நுழைந்து அம்மிக்கல்லை போட்டிருக்கிறது நயன்தாராவின் நிம்மதி.
செல்போன் டவரில் ஏறி நின்று கூப்பாடு போட்டிருந்தால் கூட இத்தனை ரீச் ஆகியிருக்குமா தெரியாது. முணுக்கென்று மும்பையில் மூச்சு விட்டார் பிரபுதேவா. அவ்வளவுதான், தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாடி நரம்பெல்லாம் இந்த கல்யாண பேச்சுதான் ஊடுருவிக் ஓடிக்கொண்டிருக்கிறது இப்போது. இந்த பேட்டிக்கு பிறகு ஏற்படப் போகும் பிரளயங்களை தவிர்க்கும் விதத்தில் தங்கள் செல்போன்களையே ஆஃப் பண்ணிவிட்டு அமைதி காக்கிறார்கள் இந்த காதலில் விழுந்த நெஞ்சங்கள். குமுறித் தீர்க்க வேண்டிய ரமலத் உட்பட!
‘உருமி’ என்ற மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பது பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ்சிவன். மும்பையில் நடந்து வருகிறது படப்பிடிப்பு. இங்கு வைத்துதான் தனது எண்ண ஓட்டத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபுதேவா.
இத்தனை காலமாக நயன்தாராவுடனான காதல் பற்றி மூச்சு கூட விடாத பிரபுதேவா, முதன் முறையாக அது பற்றி பேசியதே ஒரு ஆச்சர்யம். அதிலும் நான் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது இன்னொரு ஆச்சர்யம்.
இந்த பதிலின் பின்னணியில் நடந்தது என்ன? இத்தனை காலம் அமைதியாக இருந்த பிரபுதேவா திடுதிப்பென்று பேச வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விகளோடு கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்களை சந்தித்தோம். அவர்கள் சொல்வதை கேட்பதே ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை போலிருந்தது.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை முடித்துவிட்டு உருமி படப்பிடிப்பில் இருக்கிற பிரபுதேவாவுடன் சென்று தங்கிவிட வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் முடிவு. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கே அவர் வரவில்லை. படம் தொடர்பான பிரமோஷன்களுக்கு வருவாரா, மாட்டாரா என்றும் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அப்படக் குழுவினர். படம் ரிலீஸ் ஆனபின் ஒரு மாதம் நான் சென்னைக்கே வரமாட்டேன் என்றும் கூறியிருந்தாராம் நயன்தாரா. ஆனால் நடந்ததே வேறு. இப்படம் தொடர்பாக சின்னத்திரையில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் அவர். முன்பு முடிவு செய்திருந்த மாதிரி உருமி படப்பிடிப்புக்கு செல்லவும் இல்லை என்று பிரபுதேவாவின் அந்த பரபர பேட்டிக்கான பிள்ளையார் சுழி பற்றி விவரித்தார்கள் அவர்கள்.
அப்புறம்?
தனது வழக்கமான செல்போன் எண்ணை மாற்றிவிட்டு தற்காலிகமாக ஒரு எண்ணோடு சென்னையில் உலா வந்தார் அவர். சொன்னபடி தன்னை சந்திக்க வரவில்லையே என்று கவலைப்பட்ட பிரபுதேவா, நயன்தாராவின் செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தாலும் பலன் பூஜ்யம்தான். இந்த காதலுக்கு ஆரம்பத்திலிருந்தே து£தர் யாரும் இல்லை. இருந்த ஒரு து£தரும் புது மாப்பிள்ளை ஜோரில் இருப்பதால் (யாருன்னு புரியுதா?) நயன்தாராவை தொடர்பு கொள்ள முடியாமல் தவியாக தவித்தார் மாஸ்டர்.
ஏன் செல்போனை அணைத்துவிட்டு ஒதுங்கினார் நயன்தாரா?
அங்குதான் சாம, பேத, தான, தண்டம் என்ற டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார் அவர். தண்டனிடுவார் பிரபுதேவா என்று தெரிந்தேதான் இந்த முடிவுக்கு வந்தாராம் நயன். வெகு காலமாகவே தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார் நயன்தாரா. அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் பிரபுதேவா. அடிப்படையில் மென்மையான இதயமும், மனிதாபிமானமும் நிரம்பிய நயன்தாராவால் இந்த ஒத்திப் போடுகிற விஷயத்தை அவ்வளவு சுலபமாக ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை நமது ஸ்தானம் ஆசை நாயகி என்ற அந்தஸ்தோடு முடிந்துவிடுமோ என்று கூட அஞ்சினாராம் ஒரு சந்தர்ப்பத்தில்.
கல்யாணத்தை தள்ளிப் போடலாம். கல்யாண அறிவிப்பையாவது முதலில் வெளியிடலாமே என்ற நயன்தாராவின் ஆசைக்கு வழக்கம்போல ஜவ்வு மிட்டாய்தான் பதிலாக இருந்ததாம் மாஸ்டரிடமிருந்து. இதையெல்லாம் மனதில் வைத்துதான் உருமி படப்பிடிப்புக்கு போகாமல் தவிர்த்தார் என்கிறது நமக்கு கிடைத்த தகவல்கள்.
பிரிவின் ஆற்றாமை பிரபுதேவாவை ஒரு முடிவுக்கு வரச் செய்தது. தினமும் ஒரு முறையாவது நயன்தாரா படிக்கிற ஆங்கில வெப்சைட் எது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த பிரபுதேவா, இந்த வெப்சைட்டின் பெண் நிருபரை தொடர்பு கொண்டு இந்த பேட்டியை வெளியிட செய்தாராம். வெளிப்படையான இந்த அங்கீகாரத்தைதான் எதிர்பார்த்திருந்தார் நயன்தாரா.
மேற்படி பேட்டி வெளியான நிமிடத்தில் இருந்தே பிரபுதேவாவின் மனைவியான ரமலத்தை தொடர்பு கொள்ள துடியாக துடித்தது மீடியா. ஆனால் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்ட அவர், விடாமல் முயற்சித்து தொடர்பு கொண்ட ஒரு சிலரிடமும் இது குறித்து பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அவரது அமைதிக்கான காரணம் குறித்தும் விசாரித்தோம்.
வில்லு படப்பிடிப்பின் போது கூட இயக்குனர்-கதாநாயகி என்ற அளவிலேயே பழகி வந்தார்கள் பிரபுதேவாவும் நயன்தாராவும். அந்த நேரத்தில்தான் தனது மகனை பறி கொடுத்தார் மாஸ்டர். இந்த துக்கத்தின்போது அருகிலேயே இருந்து ஆறுதல் சொன்னது நயன்தாராதான். அப்போதுதான் இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. அதற்காக தனது குடும்பத்தையோ, மனைவியையோ விட்டு விட்டு செல்கிற அளவுக்கு கல் நெஞ்சக் காரராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை பிரபுதேவா. இருவரையும் ஒரே நேரத்தில் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.
இதற்கு நயன்தாரா ஒப்புக் கொண்டாலும், ரமலத் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாராம் பிரபுதேவா. சொத்து விஷயங்களும் சட்ட ரீதியாக சில விஷயங்களும் பேசப்பட்டன. அதுவும் சமீபத்தில் கை கூடி விட்டது என்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான பேட்டி அவரிடமிருந்து வந்ததாக தெரிவிக்கிறார்கள் பிரபுதேவாவுக்கு மிக சமீபமாக இருப்பவர்கள்.
வந்தால் உதைப்பேன் என்று பகிரங்கமாக பேட்டியளித்த ரமலத், சமீபத்தில் நயன்தாராவுடன் செல்போனில் பேசியதாகவும் கூட கூறுகிறார்கள் அவர்கள். ‘அக்கா அக்கா’ என்று ரமலத்திடம் தன் பிரியத்தை வெளிப்படுத்தும் நயன்தாரா சமீபத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி ‘அக்காவிடம் கொடுங்க’ என்று பிரபுதேவாவிடமே கொடுத்தனுப்பியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
சட்ட நிபுணர்கள் அலசுவது மாதிரி, கணவர் மீது ரமலத்தே புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படியில்லை என்றால் பிரபுதேவாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் மூக்கை நுழைக்க முடியாது. பிரபுதேவா வைக்கும் ஸ்டெப் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.