விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் காடாகுளத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம்.
இவரது மகன் சக்திகணேஷ்(வயது 8). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30-ந்தேதி வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த அவனை திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கிளியனூர் அருகே உள்ள தானாம்பாளையம் சித்தாறு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தோண்டி பார்த்த போது எலும்பு கூடு, மண்டை ஓடு மற்றும் சிறுவன் அணியும் காக்கி சட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து காணாமல் போன மாணவன் சக்திகணேசின் தாய் சத்தியா அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் தனியாக கிடந்த காக்கிச்சட்டையை பார்த்துவிட்டு அது தனது மகனுடைய சட்டைதான் என்று உறுதி செய்தார்.
இதைத்தொடர்ந்து மாணவன் சக்திகணேஷ் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டு ஆற்றில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி சந்தேகத்தின் பேரில் கிளியனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜாவை (வயது 23) இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மாணவன் சக்திகணேசின் தாய் சத்தியா மீது ராஜாவுக்கு ஆசை ஏற்பட்டது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று துடித்தார். ஆனால் சத்தியா அதற்கு சம்மதிக்கவில்லை.
இதனால் சத்தியாவை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்பதற்காக அவரது மகன் சக்திகணேசை ராஜா ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். சித்தாறு பகுதியில் அவனது கைகால்களை கட்டிப்போட்டு விட்டு உன் அம்மாவை அழைத்து வருகிறேன் என்று கூறினார். அவன் ஆத்திரத்தில் திட்டியதால் கோபம் அடைந்த ராஜா சணல் கயிற்றால் சக்திகணேசை இறுக்கி கொன்றார்.
பின்னர் பிணத்தை அங்கு போட்டு விட்டு கிளியனூருக்கு வந்து சத்தியாவிடம் உன் மகன் இருக்கும் இடம் எனக்கு தெரியும். என்னுடன் வா என்று மோட்டார் சைக்கிளில் சித்தாறு பகுதிக்கு இரவு அழைத்து சென்றார். அங்கு சென்றவுடன் தனது ஆசைக்கு இணங்கினால் அவனை காட்டுகிறேன் என்று கூறினார்.
தன்னை அனுபவிக்கத் தான் ராஜா இவ்வாறு நாடகமாடுகிறார் என்று நினைத்து அவர் மறுத்தார். உடனே ராஜா சத்தியாவை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். சத்தியா அவரது பிடியில் இருந்து தப்பி ரோட்டுக்கு ஓடிவந்து மற்றொருவர் உதவியுடன் வீட்டுக்கு வந்தார். சத்தியா தப்பி சென்று விட்டதால் ராஜா உஷாரானார்.
கிளியனூர் ஒட்டத்தெருவை சேர்ந்த தனது நண்பர் ராஜாவுடன் (14) மாணவன் சக்திகணேசின் பிணத்தை ஆற்றில் மணல் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஊரில் நடமாடிவந்தார்.
போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளி ராஜாவையும், அவரது நண்பர் ராஜாவையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
சத்தியா ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை மிரட்டவே மாணவனை கடத்தி கொலை செய்து விட்டேன் என்று தொழிலாளி ராஜா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.